என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 'ஷூ'அணிவது கட்டாயமாகிறது
சென்னை: இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களும் கண்டிப்பாக ஷூ' அணிந்து தான் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் சி.தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் புகைப்படங்கள் அந்தந்த கல்லூரி இணைய தளத்தில் வெளியிடப்பட வேண்டும். மேலும், அனைத்து பொறியியல் கல்லூரி ஆசிரியர்களின் கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும், புகைப்படத்துடன் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பெறப்பட உள்ளன.
வேதியியல் ஆய்வகத்தில் செய்முறை பயிற்சி செய்யும் மாணவர்கள் அமிலங்களை மிதிக்க நேரலாம், எலக்ட்ரிக் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் மின்சார ஒயர்களை மிதிக்க நேரலாம். அமிலங்கள் மற்றும் மின்சார தாக்குதல் உள்ளிட்ட அபாயங்கள் ஏற்படாமல் இருக்க மாணவர்கள் ஷூ' அணிவது நல்லது. இந்த முடிவு அவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதனுக்கு எப்படி உடையும், காற்றும் இன்றியமையாததோ அதே போன்று மாணவர்களின் பாதுகாப்புக்கு ஷூ' அத்தியாவசியமானது. எனவே, அவர்கள் கட்டாயமாக கல்லூரிக்கு ஷூ' அணிந்து தான் செல்ல வேண்டும். இவ் வழக்கம் இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். இதற்கான சுற்றறிக்கை அனைத்து கல்லூரிகளுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications