பாலகிருஷ்ணன் கடையில்தான் ஹார்லிக்ஸ் வாங்கினோம், திருடவில்லை-அழகிரி

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் புதிய பஸ் வழித்தடங்களை தொடங்கி வைப்பதற்காகவும், கல்வி பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் அழகிரி நேற்று காலை மதுரையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.
அவருக்கு எட்டயபுரம் பைபாஸ் ரோட்டில் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி ஸ்பிக் விருந்தினர் மாளிகையில் அவர் தங்கினார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஸ்பிக் உரத்தொழிற்சாலை ஆகஸ்ட் இறுதியில் திறக்கப்படும். அந்த நிறுவனத்தின் தலைவர் டெல்லியில் என்னை சந்தித்து பேசினார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் முன்கூட்டி வராது. எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றார்.
பின்னர் மாலையில் நடந்த பஸ்கள், வழித்தடங்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டார் அழகிரி.
அப்போது அவர் பேசுகையில், சென்னை, திருச்செந்தூர் இடையே வாரந்திர ரெயில் (செந்தூர் எக்ஸ்பிரஸ்) இயக்கப்பட்டு வருகிறது. அதை வாரம் முழுவதும் 7 நாட்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதுபற்றி மத்திய ரெயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இதைத் தொடர்ந்து வ.உ.சி.திடலில் மாணவர்களுக்கு கல்விப் பரிசளிப்பு விழா நடந்தது. அதில் பங்கேற்று அழகிரி பேசுகையில்,
எம்.ஜி.ஆரும், கலைஞரும் 40 ஆண்டு கால நண்பர்கள். அவர் ஒரு முறையாவது முதல்-அமைச்சரை பெயரைக் கூறி அழைத்து இருப்பாரா? ஆனால் இந்த ஜெயலலிதா எப்போதும் கலைஞரை பெயரைக்கூறி அழைக்கிறார்.
ஆண்டிப்பட்டியில் மருத்துவ முகாம் நடத்தினோம். அந்த மருத்துவ முகாமில் 200 கிராம் எடை கொண்ட ஹார்லிக்ஸ் டப்பா கொடுத்தோம். அதனை சோழவந்தான் அருகே லாரியை நிறுத்தி பெரிய ஹார்லிக்ஸ் பாட்டிலை திருடி கொடுத்தோம் என்று ஜெயலலிதா கூறி உள்ளார். நாங்கள் தேனியில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவருடைய கடையில் இருந்து 200 கிராம் டப்பா வாங்கி தான் கொடுத்தோம். இதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது.
சொன்ன பொய்யை ஜெயலலிதா நிரூபிக்க முடியுமா? மேடையில் நேருக்கு நேர் சந்திக்க தயாரா? ஜெயலலிதாவை கட்சியினரே சந்திக்க முடியாது. ஆனால் முதல்-அமைச்சர் கருணாநிதி தினமும் அறிவாலயத்துக்கு செல்கிறார். கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். ஜெயலலிதா ஒரு நாளாவது தலைமை கழகத்துக்கு சென்று இருப்பாரா? அப்படி சென்றால் அதனை விளம்பரப்படுத்துகிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications