காதலி சுனந்தா புஷ்கரை விரைவில் மணக்கிறார் சசி தரூர்
மும்பை: ஐபிஎல் கொச்சி விவகாரத்தில் சிக்கி வெளியுறவு இணை அமைச்சர் பதவியை இழந்த சசி தரூர் விரைவில் தனது நீண்ட நாள் காதலியான சுனந்தா புஷ்கரை மணக்கவிருப்பதாக கூறப்படுகிறது.மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடி கோவில் மற்றும் சனி சிங்கன்பூர் கோவில் ஆகியவற்றுக்கு சுனந்தாவுடன் சசி தரூர் விசிட் அடித்து சாமி கும்பிட்டுள்ளார்.இதையடுத்து இருவரும் திருமணத்திற்குத் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில்தான் சசி தரூர் தனது மனைவியை விவாகரத்து செய்தார். நாடாளுமன்ற ஆவணங்களிலும் கூட அவர் விவாகரத்தானவர் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல சுனந்தாவின் கணவர் இறந்து விட்டார். இருவரும் நெடு நாட்களாக காதலித்து வருகின்றனர்.
ஐபிஎல் கொச்சி அணியை ஏலம் எடுத்த நிறுவனத்தில் சுனந்தாவுக்கு பெரும் பங்கு இருந்ததால், அது சர்ச்சையானது. பினாமியாக சசி தரூர்தான் இந்த ஏலத்தில் பங்கேற்றதாகவும் புகார்கள் பறந்தன. இதையடுத்து சசி தரூர் ராஜினாமா செய்தார். அவர் மீது புகார்களை அடுக்கிய ஐபிஎல் ஆணையர் லலித் மோடியும் தொடர்ந்து பதவியிலிருந்து தூக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது தரூரும், சுனந்தாவும் முறைப்படி கல்யாணம் செய்து கொள்ளத் தீர்மானித்து விட்டதாக தெரிகிறது. இருவரும் சேர்ந்து மகாராஷ்டிர கோவில்களுக்குச் சென்று ஜோடியாக சாமி கும்பிட்டுள்ளனர். அனேகமாக ஆகஸ்ட் 17ம் தேதி இருவரும் கல்யாணம் செய்து கொள்ளலாம், திருவனந்தபுரத்தில் திருமணம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. ஆகஸ்ட் 17 ம் தேதி ஓணம் பண்டிகை வருவது குறிப்பிடத்தக்கது.
ஷீரடிக்கு சுனந்தாவுடன் சென்றது குறித்து தனது ட்விட்டர் தளத்திலும் குறிப்பிட்டுள்ளார் சசி தரூர். அதில், ஷீரடிக்கு முதல் முறையாக சென்றேன். சாய்பாபாவுக்கான மிகச் சிறப்பான கோவில் அது. அமைதியைப் பற்றி அருமையாக போதித்தவர் என்று கூறியுள்ளார்.
அதேபோல சனி கோவிலில் நடத்திய பூஜை குறித்து தரூர் கூறுகையில், குடும்ப அமைதிக்காக பூஜை செய்ததாக தெரிவித்தார்.