பழனி அருகே பரபரப்பு-மணற் கொள்ளையர்களை தாக்கி சிறை பிடித்த யானைகள்
பழனி பழனி அருகே ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் திருடிய கொள்ளையர்களை யானைகள் துரத்தின. இதில் 7 பேர் தப்பி விட்டனர். 3 பேர் யானைகளிடம் சிக்கிக் கொண்டனர். அவர்களை வனத்துறையினர் சென்று மீட்டு வந்துள்ளனர்.
தமிழகத்தில் மணல் திருட்டு மிகப் பெரிய அளவில் நடந்து வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு கூறுகிறது. ஆனால் இதுவரை குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் மணற் கொள்ளையர்களை யானைகள் தாக்கி சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி, பாலாறு பொருந்தலாறு பகுதியில், சிலர் லாரிகளில் வந்து மணலை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென யானைக் கூட்டம் அவர்களை வழிமறித்து விரட்டியது. இதைப் பார்த்த லாரித் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அவர்களில் 7 பேர் தப்பி அருகில் இருந்த காட்டுக்குள் புகுந்து உயிர் தப்பினர். பின்னர் அங்கிருந்து வெளியேறி காவல் நிலையத்த அடைந்த அவர்கள் தங்களுடன் வந்த 3 பேர் யானைகளிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினருக்கு போலீஸார் தகவல் தெரிவிக்கவே அவர்கள் விரைந்து வந்தனர். அப்போது யானைகளிடம் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 பேரையும், யானைகளை விரட்டி விட்டு வனத்துறையினர் மீட்டனர். அவர்களில் ஒருவரை யானைகள் தாக்கியதில் காயம் ஏற்பட்டிருந்தது. அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
யாரிடமும் சிக்காமல் அட்டகாசம் செய்து வந்த மணற் கொள்ளையர்களை யானைக் கூட்டம் சிறை பிடித்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications