மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை விமர்சிக்க அதிமுகவிற்கு நீதி மன்றம் தடை
மதுரை எஸ்.எஸ். காலனி நாவலர் நகரைச் சேர்ந்த சுகுமார் என்பவர் மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது,
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கடமலைக்குண்டு கிராமத்தில் நடந்த மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களுக்கு ஹார்லிக்ஸ் பாக்கெட் வழங்கினார்.
மேலும், கடந்த மாதம் 30-ம் தேதி நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகளை திருடி மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கொடுப்பது போல கார்ட்டூன் இடம் பெற்றுள்ளது. அதன் அருகில் தா.கி. ஆவி என்ற தலைப்பில் 22 வரி கவிதையும் எழுதப்பட்டிருந்தது.
இந்த கார்ட்டூனை பெரிய அளவில் போஸ்டராக மதுரை நகர் முழுவதும் அதிமுக-வினர் ஒட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எனவே, மத்திய அமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ள இது போன்ற சுவரொட்டிகளை அதிமுக-வினர் ஒட்டுவதற்கு தடை விதிக்கவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ரத்தினராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கூறியுதாவது,
அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்க முடியாது. ஆனால், அவர்களது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விமர்சனங்கள் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிடும்.
எனினும், இந்த வழக்கைப் பொறுத்தவரை ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் முறையாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ரசீதுகளும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் வெளிவந்த கார்ட்டூன், கவிதை தவறானது மட்டுமல்ல, அமைச்சர் மு.க. அழகிரிக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடியதாகும்.
எனவே, வரும் 17-ம் தேதி வரை இது போன்ற சுவரொட்டிகளை ஒட்டவும், கேலிச் சித்திரங்களை வெளியிடவும் இடைக்கால தடை விதிக்கிறேன் என்று உத்தரவிட்டார்.