பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி ஜாமீன் மனு தள்ளுபடி
பெங்களூரில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் மதானிக்கு தொடர்பு இருப்பதாக அம்மாநில போலீசார் இவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மேலும் மதானியை கைது செய்ய கர்நாடக போலீசார் கடந்த மாதம் கொல்லம் வந்தனர்.
அவர் கைது செய்யப்படுவார் என்று கருதப்பட்ட நிலையில், அவரை கைது செய்யாமல் கர்நாடக போலீசார் திரும்பினர். இந்நிலையில் மதானி சார்பில் பெங்களூர் நீதிமன்றம், செசன்சு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டு அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இது குறித்து கொல்லத்தில் மாதனி நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,
என் மீது போடப்பட்ட வழக்கிற்காக என்னை அம்மாநில போலீசார் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யட்டும், அதற்காக நான் தயார் நிலையில் உள்ளேன்.
அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். மேலும் எனது கைது காரணமாக கேரளாவில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படாது. சிறைக்கு செல்ல நான் தயாராக உள்ளேன். மேலும், என் மீது சாட்டப்பட்ட குற்றம் பொய் என்பதை நிரூபிக்க வேண்டியதால் தான் முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளேன்.
என் மீது போடப்பட்ட பொய் வழக்கு என்பதால் தான் போலீசார் போதிய ஆதாரங்களை, சாட்சிகளை திரட்டிட வேண்டும் என்பதற்காக என்னை கைது செய்யாமல் காலம் தாழத்துகின்றனர் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து கொல்லத்தி்ல் அவரது வீட்டிற்கு முன்பு ஏராளமான ஜனநாயக மக்கள் முன்னனி கட்சியினர் திரண்டுள்ளனர்.