இரும்புக் கடை ஊழியர்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி ரூ. 23 லட்சம் திருட்டு
சென்னை: மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சென்னை கிண்டி ரயில் நிலையப் பகுதியில், கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி இரும்புக் கடை ஊழியர்களிடம் ரூ. 23 லட்சம் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் இரும்புக் கடை நிறுவனத்தை நடத்தி வருபவர் ஜாகிர் உசேன். இவரது தம்பி ஷாஜகான். கடை வியாபாரத்தை இவரும் அண்ணனுடன் சேர்ந்து பார்த்து வருகிறார்.
நேற்று இரவு ஷாஜகானும், கடை ஊழியர் ஷாகுல் ஹமீத் ஆகியோர் கடை வசூல் பணமான ரூ. 23 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஆட்டோவில் கிளம்பினர்.
ஆட்டோ, கிண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் போனபோது பின்னால் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர் ஆட்டோ மீது மோதினர். இதையடுத்து ஆட்டோவை நிறுத்தி விட்டு ஷாஜகான் உள்ளிட்டோர் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கும்பலில் இருந்த ஒரு நபர் ஷாஜகான், ஷாகுல் ஹமீது மீது மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டார். இதனால் கண் எரியவே இருவரும் தடுமாறினர்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்டோவில் இருந்த ரூ. 23 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.
மிகுந்த மக்கள் கூட்டமுடைய பகுதியில் இவ்வாறு துணிகரமாக நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழைய குற்றவாளிகளுக்கு இதில் தொடர்பு இருக்கலாம். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருவதாக துணை ஆணையர் சாரங்கன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications