பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தியும், வருங்காலத்தில் பெட்ரோலிய கம்பெனிகளே தங்கள் இஷ்டம்போல் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் அண்மையில் இந்திய அரசு முடிவெடுத்தது. இதை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சியினரும், அமைப்புகளும் திரும்பப் பெற வலியுறுத்தினர்.
இந்தியாவிலேயே தி.மு.க. அரசு தான் பெட்ரோலியப் பொருட்களின் மீது உயர்ந்தபட்சமாக வரி விதிக்கிறது. டெல்லியில் 20 சதவிகிதமாக இருந்த விற்பனை வரியை, தற்பொழுது 12.5 சதவிகிதமாக குறைத்துள்ளனர். இதனால் விலை உயர்வுக்கு முன்பு விற்ற விலையைவிட இப்பொழுது டீசல் விலை இன்னும் குறைந்துள்ளது. ஆந்திர மாநிலமும் விலை உயராமல் பார்த்துக் கொண்டுள்ளது. தமிழக அரசு மட்டும் விற்பனை வரியை குறைக்கவில்லை.
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கூறினால் மட்டும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தான் மின்சார கட்டணம் குறைவு என்று சொல்லி சில மாநிலங்களின் கட்டண விவரங்களை வெளியிட்டு, தான் உயர்த்திய மின்கட்டண உயர்வுக்கு நியாயம் கற்பித்துள்ளார். இதற்கு மட்டும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் முதல்-அமைச்சர், பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கப்படும் குறைவான விற்பனை வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட்டு காட்ட மறுக்கிறார்?
பெட்ரோலிய பொருட்களின் மீதுள்ள விற்பனை வரியை இதர மாநிலங்களைப் போல குறைக்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து தே.மு.தி.க. நடத்தும் தொடர் ஆர்ப்பாட்டத்தின்படி அடுத்தகட்டமாக திருச்சியில் 6-ந் தேதி காலை 11 மணியளவில் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் தே.மு.தி.க. துணைச்செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications