திருச்சி ஜெ. ஆர்ப்பாட்டம்-அதிமுக சுறுசுறுப்பு-எஸ்எம்எஸ் மூலம் ஆதரவு சேகரிப்பு
திருச்சி : திருச்சியில் வரும் 14ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டத்திற்காக திருச்சி முழுவதும் அதிமுகவினர் படு சுறுசுறுப்பாக வேலை பார்த்து வருகின்றனர். எஸ்.எம்.எஸ். மூலம் பொதுமக்களின் ஆதரவையும் அவர்கள் திரட்டி வருகின்றனர்.
திருச்சியில் ஜெயலலிதா தலைமையில் வரும் 14ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. திமுக அரசை கண்டித்து நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டம் கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை விட மிக பிரம்மாண்டமாக நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.
24-ம் தேதி என ஆர்ப்பாட்டம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 14-ம் தேதி என அறிவிக்கப்பட்டதால் குறைந்த நாட்களே உள்ளன. எனவே திருச்சி அதிமுகவினர் ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளில் மும்முராகி உள்ளனர்.
100 அடி, 200 அடி என பிரம்மாண்ட சுவர் விளம்பரங்களை எழுதி வருகின்றனர். சுவர்களை பிடித்து விளம்பரங்கள் எழுதி வரும் நிலையில் ஆர்ப்பாட்டத்துக்கு குறைந்த நாட்களே உள்ளதால் அதிமுகவினர் செல்போன்களையும், பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
எஸ்.எம்.எஸ். மூலமாகவும், அ.தி.மு.க.வினர் ஆதரவு திரட்டுகிறார்கள். ஆகஸ்டு14 திருச்சி புரட்சித்தலைவி அம்மா அழைக்கிறார் வாரீர் என எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்களை பரப்பி வருகின்றனர்.
திருச்சி முழுவதும் அதிமுகவினரின் தீவிர விளம்பரம் மற்றும் பிரசாரத்தால் நகர் முழுவதும் அதிமுக மயமாகக் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications