திருச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் லஞ்ச வழக்கில் கைது
திருச்சி: திருச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் திலகமணி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் சிறுசேமிப்பு ஏஜன்ட் உரிமத்தை புதுப்பிக்க, ரூ 1000 லஞ்சம் வாங்கிய சிறுசேமிப்புத் துறை உதவி இயக்குனர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கனகா தமிழக அரசின் சிறுசேமிப்புத்துறை ஏஜன்டாக பணிபுரிந்து வருகின்றார்.
தமிழக அரசின் சிறுசேமிப்புத் துறை ஏஜன்டாக பணியாற்றுபவர்கள், மூன்றாண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது அரசு விதி.
கனகாவுக்கு கடந்த 31-ம் தேதியோடு உரிமம் முடிந்தது. இதனால் அவர் ஒரு மாதம் முன்பே உரிமத்தை புதுப்பிக்க துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அங்கிருந்து அவரது விண்ணப்பம், திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுசேமிப்புத் துறை உதவி இயக்குனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனகா தனது உரிமம் குறித்து திருச்சி சிறுசேமிப்புத் துறை உதவி இயக்குனர் திலகமணியிடம் (46) விவரம் கேட்டார்.
அதற்கு அவர், ரூ. 500-க்கு தேசிய சேமிப்பு பத்திரம் ஒன்றும், ரூ. 1000 லஞ்சமும் கொடுத்தால் தான், உனது உரிமத்தை புதுப்பித்து தரமுடியும் என கூறியுள்ளார்.
இதனால் மனம் உடைந்த கனகா, இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, கனகா திலகமணியிடம் ரூ. 1000 கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திலகமணியை கையும் களவுமாக பிடித்தனர்.
இதனையடுத்து, அவரது அலுவகத்திலும், வீட்டிலும் சோதனை செய்த போது கணக்கில் காட்டப்படாத பல ஆயிரம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
திலகமணி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications