விஷ ஆமணக்கு சாப்பிட்ட 11 மாணவர்கள் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே விஷ ஆமணக்கு சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ளது அருகன்குளம். இங்கு அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. மதிய இடைவெளியி்ன்போது பள்ளி மாணவர்கள் 11 பேர் அங்குள்ள காட்டுக்குச் சென்று விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வேர்கடலை போன்று இருந்த விஷ ஆமணக்கை பிடுங்கித் தின்றனர். மேலும், புத்தக பையிலும் அதை பிடுங்கி வைத்து கொண்டனர்.
அதன் பிறகு பள்ளிக்கு வந்த அவர்கள் சிறிது நேரத்தில் வயிறு வலிப்பதாக கூறி ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். அப்போது வகுப்பி்ல் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே முதலுதவி சிகிச்சையாக அவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர். வீட்டுக்கு சென்ற மாணவர்களின் நிலைமை மோசமானது. வாந்தி எடுத்து மயங்கி விழவே பயந்து போன பெற்றோர் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் அதே ஊரைச் சேர்ந்த நச்சாடலிங்கம் மகன் ராதா கிருஷ்ணன், திருமால் மகன் மாரி முத்து, கணேசமூர்த்தி மகன் செல்வபகவதி, ராமகிருஷ்ணன் மகன் அசோக் குமார், வேல்முருகன் மகன் செல்லமூர்த்தி, முனியாண்டி மகன்கள் காளிஸ்வரன், கலைச்செல்வன், மற்றொரு முனியாண்டி மகன் கலைசெல்வன் ஆகிய 8 பேர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலும் மற்ற 3 மாணவர்கள் கரிவலம்வந்தநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓரே கிராமத்தில் விஷ விதை சாப்பிட்டு 11 மாணவர்கள் பாதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.