For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாஸ்மாக் ஊழியர்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும்-ஜெ

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: டாஸ்மாக் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அதிமுக தனது முழு ஆதரவினை அளிக்கும். இந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 29.11.2003 முதல் டாஸ்மாக் நிறுவனத்தில் சில்லரை வர்த்தகம் துவங்கப்பட்டதில் இருந்து மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவியாளர்கள் என கிட்டத்தட்ட 30,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசின் மொத்த வருவாயில் 25 விழுக்காடு வருவாயை ஈட்டித்தரும் இவர்கள் படும் துன்பங்கள், துயரங்கள் சொல்லி மாளாது.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் பணியாற்றியும் இவர்களுடைய பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இவர்கள் விஷயத்தில் எந்த ஒரு தொழிலாளர் நலச்சட்டங்களும் பின்பற்றப்படுவதில்லை.

கடந்த சில ஆண்டுகளாக, பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், எட்டு மணி நேர வேலை, வார விடுமுறை, ஆண்டு விடுப்பு, தேசிய மற்றும் பண்டிகை விடுப்பு, வைப்புத் தொகைக்கு 12 விழுக்காடு வட்டி, பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வேலை, ஊக்கத் தொகை, உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு அரசுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தொடர்ந்து முறையீடு செய்து வந்துள்ளார்கள்.

ஆனால் இவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றவோ, போராடும் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ திமுக அரசு முன்வரவில்லை.

இந் நிலையில், மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு 11.8.2010 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளது. இந்த நிலையிலும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கும் சங்கங்களை அழைத்து பேசாமல், பூரண மது விலக்கு அமல் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டும் வகையில் முதல்வர் பேசுகிறார்.

வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என தொழிலாளர்களை அச்சுறுத்தி கையொப்பம் வாங்கும் நடவடிக்கையிலும், புதிய ஆட்களை நியமிக்கும் நடவடிக்கையிலும் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. இது போன்ற தொழிலாளர் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராடும் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பது தான் முறையான செயல் என்பதைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டு இருக்கிறேன்.

டாஸ்மாக் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அதிமுக தனது முழு ஆதரவினை அளிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, டாஸ்மாக் தொழிலாளர்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதையும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X