நில விவகாரம்: திருமாவளவன் தாயார் புகாரை பதிவு செய்ய போலீசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: நில விவகாரம் தொடர்பாக திருமாவளவனின் தாயார் கொடுத்தள்ள புகாரைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் தாயார் பெரியம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,
சென்னை வடபழனி 100 அடி சாலையில் எனக்கு சொந்தமான சுமார் 3 கிரவுண்ட் நிலம் இருந்தது. இதை மீனம்பாக்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணனிடம் இருந்து 2006ம் ஆண்டு முறைப்படி வாங்கினேன். ஆனால் மைலாப்பூரில் வசிக்கும் பத்மநாபமூர்த்தி மற்றும் ஆந்திராவை சேர்ந்த ராமசுப்பிரமணியம் உள்ளிட்டோர் போலி ஆவணம் தயார் செய்து எனது சொத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து ராமசுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது போலி ஆவண மோசடியின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தேன்.
ஆனால் என் புகாரை பதிவு செய்யாமல் போலீசார் இழுத்தடித்து வருகின்றனர். எனவே, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், பெரியம்மாள் தந்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டார்.