சுற்றுலா பயணிகளிடம் அத்துமீறல்: குற்றாலத்தில் போலீசார் அட்டகாசம்
குற்றாலம்: சுற்றுலா பயணிகளிடம் தங்களது வீரத்தை காட்டும் போலீசாரால் பயணிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளம் குற்றாலம். இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் களை கட்டும். இங்கு சீசனை அனுபவிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் 25 முதல் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம்.
இங்குள்ள மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் இந்த சீசன் காலங்களில் கட்டுகடங்காத கூட்டம் அலைமோதுவதும் போதிய போலீசார் இல்லாமல் அருவிகளில் குளிக்க வரும் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் காவல்துறை திணறுவதும் குறிப்பிடத்தக்கது.
எந்த ஆண்டையும் போல் அல்லாமல் குற்றாலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவது வேதனையான விஷயம். மெயின் அருவியில் குளிக்க வருபவர்களையும் சரி, குளிப்பவர்களையும் சரி போலீசாரின் லத்தி பதம் பார்க்காமல் விடுவதில்லை. அதையும் மீறி கேள்வி கேட்டால் பலத்த கவனிப்புகளுக்கும் பஞ்சமில்லை.
மேலும் பெண்கள் குளிக்கும் பகுதியில் பெண் போலீசாரை பெயரளவுக்கு நியமித்து விட்டு ஆண் போலீசார் அங்கே பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பெண் சுற்றுலா பயணிகள் பல்வேறு அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஆண் போலீசார் பெண்கள் குளிக்கும் பகுதிக்குள் எல்லை மீறி செல்வதால் தேவையற்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வேதனை அடைகின்றனர். மேலும் இங்கு குளிக்க வி.ஐ.பி.கள் வந்துவிட்டால் குளி்த்து கொண்டிருப்பவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு அவர்கள் குளித்து முடிக்கும் வரை மற்றவர்கள் காத்திருக்க வேண்டிய சம்பவங்களும் அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications