86 கைதிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை மத்திய சிறையில் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட 86 கைதிகளுக்கு தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1995-ம் ஆண்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் தடா கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பகுதியில் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது 9 தடா கைதிகள் இருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசாரும், சிறைத் துறை காவலர்களும், சிறைக்குள் புகுந்து தடியடியில் இறங்கினர். இதையடுத்து ஏற்பட்ட மோதலில் 86 கைதிகள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அப்போதைய தடா கோர்ட் நீதிபதி சிறைக்குச் சென்று விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் 95-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் போலீசாரின் தாக்குதலுக்கு சிறையில் இருந்த அப்பாவி கைதிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் எலிபே தர்மாராவ், சசிதரன் ஆகியோர் அளித்த அளித்த தீர்ப்பில் காயம் அடைந்த 86 கைதிகளுக்கும் அவர்களது காயத்துக்கு ஏற்றவாறு ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் என்ற வீதத்தில் 6 சதவீத வட்டியுடன் தமிழக அரசு நஷ்ட ஈடுவழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.