நித்தியானந்தா மடத்தில் சேர வேண்டும்-டிஜிபியிடம் பெண் சீடர் புகார்
சென்னை: நான் நித்தியானந்தா மடத்தில் சேர விரும்புகிறேன். ஆனால் எனக்கு மிரட்டல் வருகிறது. எனவே பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறி டிஜிபி லத்திகா சரணிடம் ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார்.
கிரிஜா என்பவர் நித்தியானந்தாவிடம் சீடராக இருந்தவராம். இடையில், ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் நித்தியானந்தா செய்த லீலைகள் குறித்த பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கிரிஜாவை அவரது பெற்றோர் நித்தியானந்தா மட்ததிலிருந்து கூப்பிட்டு வந்து விட்டனர். தற்போது மீண்டும் நித்தியானந்தாவுடன் சேரத் துடிக்கிறார் கிரிஜா. ஆனால் வீட்டினர் மிரட்டுவதாக கூறி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து டிஜிபி லத்திகா சரணிடம் புகார் கொடுத்த அவர் கூறுகையில்,
எனக்கு சொந்த ஊர் சென்னை திருவொற்றியூர். 27 வயதாகிறது. என் பெற்றோருக்கு நான் ஒரே பெண். எனது 2 சகோதரர்கள் தங்க நகைகள் செய்யும் வேலை செய்கிறார்கள்.
நான் கடந்த இரண்டரை வருடங்களாக நித்யானந்தா சாமியாரின் பெங்களூர் ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ள நான், ஆசிரமத்தில் ஆன்மிக சேவை புரிந்தேன்.
நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவின் ஆசிரமத்தில் ஒரு ஆசிரமவாதியாக தான் இருந்தார். நித்யானந்தா ஆசிரமத்தில் என்னைப்போல் 60 பெண் சீடர்கள் உள்ளனர். சுமார் 200 பேர் அங்கு தங்கியிருக்கிறார்கள். நித்யானந்தாவின் ஆசியோடுதான் நான் சன்னியாசம் பெற்றுள்ளேன்.
ரஞ்சிதாவோடு இணைத்து நித்யானந்தா மீது குற்றச்சாட்டுகள் கிளம்பியவுடன் எனது பெற்றோர்கள் வற்புறுத்தலின் பேரில், நான் திருவொற்றியூர் வந்துவிட்டேன்.
இப்போது எனது சன்னியாசினி கோலத்தை கலைத்துவிடும்படி எனது பெற்றோர் சொல்லுகிறார்கள். எனக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். நான் திருமணத்துக்கு மறுத்துவிட்டேன். நான் மீண்டும் ஆசிரமம் செல்ல விருப்பமாக உள்ளேன்.
ஆசிரமம் சென்றால் நித்யானந்தா மீது புகார் கொடுப்போம் என்று மிரட்டுகிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சியதால் நான் எங்கள் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன்.
எனது வாழ்க்கையை தீர்மானித்துக்கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது. அதன்படி நான் மீண்டும் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு செல்லுகிறேன். எனக்கு உரிய பாதுகாப்பு கேட்டுதான் நான் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்துள்ளேன் என்றார்.