சென்னையில் அருந்தமிழர் குடியரசு கட்சி உதயம்
கரூர்: தலித் விடுதலை இயக்கம் என்ற அமைப்பு அருந்தமிழர் குடியரசு கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.
மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இது பலம் வாய்ந்த தலித் அமைப்பாம்.
இந்த அமைப்பு தலித் மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, ஜாதி ரீதியான வன்முறை, தலித் மக்களின்அடிப்படை உரிமை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக போராடி வந்தது.
இந்த நிலையில், இந்த அமைப்பு சார்பில் அருந்தமிழர் குடியரசு கட்சி என்ற பெயரில் கட்சி துவங்கப்பட்டது. இந்த கட்சியை அதன் தலைவர் தலித் ஞானசேகரன் சென்னையில் பிராட்வே அருகில் உள்ள ஏ. ஆர். சி. சர்ச் வளாக காம்ளெக்ஸ் முறைப்படி துவங்கி வைத்தார்.
ஆனால், கட்சி கொடி, பேனர், வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை , போஸ்டர், தாரை தப்பட்டை முழுக்க வரவேற்பு என எந்த வித ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது.
இது பற்றி அதன் தலைவர் தலித் ஞானசேகரனிடம் கருத்து கேட்ட போது, நாங்கள் அரசியல் கட்சி துவங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்தும் கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தது. காலம் கனிந்து வர வேண்டும் என்று காத்திருந்தோம். தற்போது காலம் எங்களுக்கு சாதகமாக உள்ளது.
அரசியல் என்பது ஆடம்பரம், ஆர்பாட்டம் என்பதல்ல. மக்களுக்கு தேவையானவற்றைப் பெற்றுத் தருவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது , அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது போன்றவைகளும் அடங்கும். எனவே அதற்கான இலக்கை நோக்கி நாங்கள் செல்ல வேண்டி உள்ளதால் எங்கள் பார்வை எல்லாம் மக்களுக்கு அடிப்படை உரிமைகளை பெற்றுத் தருவது தான் என்றார்.