சுதந்திர தினம் முதல் கலைஞர் வீட்டு வசதி திட்டம் அமல்!

முதல்வர் கருணாநிதி நாளை மறுநாள் முதல் கட்ட பயனாளிகளுக்கு இதற்கான ஆணைகளை வழங்குகிறார்.
தமிழ்நாட்டை குடிசை இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டம் அறிவிக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் திருச்சியில் முதல்வர் கருணாநிதி இந்த திட்டத்தை அறிமுகம் செய்தார்.
கிராமப் பகுதிகளில் 6 ஆண்டுகளில் சுமார் 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டிக் கொடுக்கும் இந்த திட்டத்தில் முதல் கட்டமாக இந்த ஆண்டு ரூ.1,800 கோடி செலவில் 3 லட்சம் வீடுகளை கட்ட திட்டமிடப்பட்டது.
தலா ரூ.60,000த்தில் கட்டப்படும் இந்த வீடுகளை பயனாளிகளே கட்டிக் கொள்ளலாம். இந்த வீட்டுக்கு தேவைப்படும் சிமெண்ட், கம்பிகள் ஆகியவற்றை அரசு வழங்கும்.
இந்த வீடு கட்டும் திட்டத்திற்கான பணிகள் நாளை மறுநாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்படுகின்றன. அன்றைய தினம் பயனாளிகளுக்கு இதற்கான ஆணைகளை முதல்வர் வழங்குகிறார்.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒருவர் வீதம் 31 பயனாளிகளுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பணி ஆணைகள் நாளை மறுதினம் முதல்வர் வழங்குவார்.
இத் தகவலை ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அலாவுதீன் தெரிவித்துள்ளார்.
முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதியுடன் நிறைவேற்றப்படும் இந்த திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக கிராமப்புற பகுதிகளில் குடிசை வீடுகளே இல்லாத நிலையை ஏற்படுத்துவதுடன், நாட்டிலேயே முதல் குடிசையில்லா மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெறும்.
சுதந்திர தினத்தையொட்டி இதன் துவக்க விழா நடைபெறுகிறது. வீடு வழங்கும் திட்டத்தில் சேரும் பயனாளிகளை மாவட்டந்தோறும் கணக்கெடுக்கும் பணி ஏற்கனவே முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications