திருச்சியில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்-வருகிறார் ஜெ.
திருச்சி : திருச்சியில் நாளை நடைபெறவுள்ள அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமை தாங்கிப் பேசுகிறார். இதையடுத்து திருச்சி அதிமுக மயமாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் அதிமுக கொடிகளாக காணப்படுகிறது.
பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி கோவையில் ஜெயலலிதா தலைமையில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தானே ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கத் தொடங்கியுள்ளார் ஜெயலலிதா.
அந்த வகையில் நாளை திருச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அவர் தலைமை தாங்குகிறார்.
விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சனை, மீனவர் பிரச்சினை, மணல் கொள்ளை ஆகியவற்றை கண்டித்து திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நாளை மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் பெரும் திரளாக வருகை தரவுள்ளனர்.
இவர்கள் வரும் வாகனங்களை நிறுத்த காஜாமியான் பள்ளி, திருச்சி இரும்பு உருக்காலை உள்பட 10 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா கூட்டத்திற்கான பாதுகாப்புப் பணிகளை கவனிக்க போலீஸாரை நம்பாமல் அதிமுகவே தனியாக தொண்டர் படையை ஏற்பாடு செய்துள்ளது, அவர்களுக்கு தனி சீருடையும் தரப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சதியிலேயே முகாமிட்டு போராட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக ஜெயலலிதா தனி விமானம், நாளை மாலை 4 மணிக்கு திருச்சி விமான நிலையம் செல்கிறார். பிறகு, கார் மூலம் சுப்பிரமணியபுரம், டி.வி.எஸ்.டோல்கேட் வழியாக ஜி கார்னர் மைதானம் சென்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றார்.
மதுரை, நெல்லையிலும்...
திருச்சி ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மதுரையிலும், அடுத்து நெல்லையிலும் ஜெயலலிதா தலைமையில் கண்டனக் கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி அல்லது மதுரை கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை ஜெயலலிதா வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினர் மத்தியில் நிலவுகிறது.