சென்னை அருகே அம்மன் சிலைகள் பால் குடித்ததாக பரபரப்பு
சென்னை : சென்னை அருகே கோவில்களில் இருந்த அம்மன் சிலைகள் பால் குடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திரண்டு வந்த பெண்களும், ஆண்களும், சிறுமிகளும் அம்மன் சிலைகளுக்குப் பால் கொடுத்து பரவசமடைந்தனர்.
இது ஆடி மாதம். தமிழகம் முழுவதும், சென்னையிலிருந்து குமரிவரை அனைத்து அம்மன் கோவில்களிலும் விழாக் கோலம் பூண்டுள்ளது. கூழ் காய்ச்சுவது, தீ மிதிப்பது என விசேஷமாக உள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பூந்தமல்லி பகுதியில் 3 கோவில்களில் அம்மன் சிலை பால் குடித்த தாக பரபரப்பான தகவல் பரவியது.
நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், பூந்தமல்லி பாணவேடு தோட்டத்தில் உள்ள மாத்தம்மன் கோவிலில் அம்மன் சிலைக்கு பக்தர் ஒருவர் பால் கொடுத்தார். ஒரு சிறிய ஸ்பூனில் பாலை எடுத்து அம்மன் வாயில் வைத்தார். சிறிது நேரத்தில் அந்த பாலை சிலை உறிஞ்சியது.
இதையடுத்து நூற்றுக்கணக்கான பெண்கள் படையெடுத்து வந்தனர். நீண்ட கியூ வரிசையில் நின்று அம்மனுக்கு பால் கொடுத்து பரவசமடைந்தனர்.
இதேபோல பாரிவாக்கம் கிராமத்தில் கொல்லாபுரி மாரியம்மன் கோவில், கெங்கையம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களில் உள்ள அம்மன் சிலைகளிலும் பால் குடிப்பதாக தகவல் பரவியது. இங்கும் மக்கள் படையெடுத்தனர்.
3 அம்மன் கோவில்களிலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டது. விடிய விடிய 3 கோவில்களுக்கும் பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர்.
நேற்றும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. பல பெண்கள் ஆவேசமாக சாமியாடி குறி சொன்னார்கள்.












Click it and Unblock the Notifications