இப்போதே பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல் காந்தி
பெங்களூர்: வருங்காலத்தில் பிரதமர் ஆனால் என்ன செய்வேனோ அதைத்தான் இப்போதும் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.
பெங்களூர் செயின்ட் பிலோமினா கல்லூரியில் இந்திய தேசிய மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார் ராகுல் காந்தி. அப்போது அவர் பேசுகையில்,
போராட்ட சுதந்திரம், பேச்சு சுதந்திரம், உரிமை சுதந்திரம் என்றால் என்ன என்பது பற்றி இளைஞர்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அதன்படி நடக்க வேண்டும்.
நமது நாட்டில் உயர்கல்வி கற்றுக் கொண்டு, வெளிநாட்டில் சென்று சேவை செய்கிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. நமது நாட்டிலேயே பணியாற்ற வேண்டும். மேலும் வெளிநாட்டில் உயர்கல்வி கற்றுக்கொண்டு, அதை பயன்படுத்தி நமது நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.
நமது நாட்டின் முதுகெலும்பாக கல்வி, விவசாயம் ஆகியவை உள்ளது. எனவே கல்வி, விவசாய முன்னேற்றத்துக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்தை பற்றி நன்கு அறிந்து கொண்டு, அதன் முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டும். இந்திய விவசாயிகளுக்கு வெளிநாட்டு விவசாய முறைகள் குறித்து எடுத்துக்கூற வேண்டும். மேலும் தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு, அதன் மூலமும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை களைய இளைஞர்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும். அதன்மூலம் நமது நாடு வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications