சுதந்திர தினம்-தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
வாகன சோதனையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் இரவு நேர ரோந்து தீவிரமாக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் கிட்டத்தட்ட 5000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய வணிக வளாகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் கருணாநிதி கொடியேற்றி வைக்கவுள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகப் பகுதியில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.