மதானிக்கு திடீர் உடல் நலக்குறைவு-கைதாவதில் சிக்கல்
கொல்லம்: மதானியைக் கைது செய்வதற்காக வாரண்ட்டுடன் வந்து கடந்த பத்து நாட்களாக கொல்லத்தில் காத்திருக்கிறார்கள் பெங்களூர் போலீஸார். ஆனால் அவருக்கு திடீரென உடல் நலம் சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் சேர்க்க முயற்சிகள் தொடங்கியுள்ளன.
பெங்களூரில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கேரளாவைச் சேர்ந்த ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
மதானி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை பெங்களூர் தனி நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. அவரை கைது செய்ய பெங்களூர் மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து அவரை கைது செய்வதற்காக பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கமிஷனர் சித்தராமைய்யா தலைமையில் 6 போலீ்ஸ் அதிகாரிகள் கடந்த 10-ம் தேதி கொல்லம் சென்றனர்.
ஆனால் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் சட்டம்-ஒழுங்கு நிலைக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் கைது நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது. மதானியைக் கைது செய்ய கேரள போலீஸார் அனுமதிக்காமல் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலை பேட்டியளித்த கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் மதானி தகுந்த நேரத்தில் கைது செய்யப்படுவார். அதைச் செய்ய வேண்டியது கர்நாடக போலீஸார்தான். சட்டம் ஒழுங்கையும் நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது. எனவே கைதை இன்னும் அனுமதிக்காமல் உள்ளோம் என்று கூறினார்.
இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார் மதானி. இந்த நிலையில், மதானியின் வீடு உள்ள அன்வர்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொல்லம் மாவட்ட கலெக்டர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். கொல்லம் மாவட்ட எஸ்.பி. ஹர்சிதா அட்டல்லூரி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூரைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்களை அந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
அன்வர்சேரியில் அவரது ஆதரவாளர்கள் அதிகளவு திரண்டதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் மதானியின் ஆதரவாளர்கள் சிதறி ஓடினர்.
திடீர் உடல் நலக்குறைவு:
இந்த நிலையில் இன்று பிற்பகலில் மதானிக்கு உடல் நலம் சரியில்லை என தகவல் பரவியது. அவரது வீட்டுக்கும் ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது. அவரை மருத்துவமனையில் சேர்க்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது.
மதானியை மருத்துவமனையில் அனுமதித்து கைது நடவடிக்கையை காலம் தாழ்த்த முயற்சிகள் நடப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
கோர்ட்டில் சரணடைவேன்-மதானி:
இந்த நிலையில் நேற்று நிருபர்கள் மதானியை தங்கி இருக்கும் இடத்துக்கு சென்று அவரை சந்தித்தனர். அப்போது அவர் கூறுகையில், என்னிடம் கைது வாரண்டு இன்னும் கொடுக்கப்படவில்லை. என்னை கைது செய்தால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட நான் விரும்பவில்லை. நான் கோர்ட்டை மதிக்கிறேன்.
இன்னும் சில நாட்களில், அருகில் உள்ள கோர்ட்டில் சரண் அடைவேன். எந்த தேதியில் சரண் அடைவேன் என்பதை 16-ந்தேதி தெரிவிப்பேன். எனக்கும் பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் சம்பந்தம் இல்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.நசீருடன் நான் நேரடியாகவோ, டெலிபோனிலோ பேசவில்லை.
எனது உடல் பலவீனமாக இருக்கிறது. என்னை போலீசார் வந்து கைது செய்தால் அதனால் ஏற்படும் சூழ்நிலையை எனது உடல் தாங்காது. எனவே நான் சரண் அடையவே விரும்புகிறேன் என்றார்.
முதல்வரிடம் முஸ்லீம் அமைப்புகள் முறையீடு:
இந்தச் சூழ்நிலையில் முதல்வர் அச்சுதானந்தனை முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சந்தித்தனர். அப்போது அவரிடம், சுப்ரீம் கோர்ட்டில் மதானி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்து இருப்பதால், அந்த மனு மீதான விசாரணை முடிந்தபின் நடவடிக்கை எடுக்கலாம் என்றனர். இதைக் கேட்ட அச்சுதானந்தன் ஆவண செய்வதாக கூறினார்.
இந்தச் சூழ்நிலையில் மதானி கைது படலம் தொடர்ந்து குழப்பமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications