ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மளிகைப் பொருள் பாக்கெட் விலை குறைப்பு
சென்னை: ரேஷன் கடைகளில் மானிய விலையில் அரசு வழங்கும் மளிகைப் பொருட்கள் அடங்கிய பாக்கெட் விலை ரூ. 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அளவையும் குறைத்து விட்டனர்.
ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் 10 மளிகைப் பொருட்களைக் கொண்ட பாக்கெட்டை அரசு ரூ. 50க்கு வழங்கி வருகிறது. இதில் கடுகு, மிளகு, சீரகம் உள்பட 10 பொருட்கள் இடம் பெற்றிருக்கும். மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் தற்போது இதன் விலை மற்றும் அளவை குறைத்துள்ளனர்.
.
அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆகஸ்ட் மாதத்துக்கு, மானிய விலையில் வழங்கப்படும் 10 மளிகைப் பொருள்கள் உள்ள பாக்கெட்டின் விலை ரூ. 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சொன்னதைச் செய்வோம் சொல்வதைச் செய்வோம் என்ற வாசகங்களுடன் முதல்வர் கருணாநிதியின் படத்துடன் கூடிய இந்த பாக்கெட்களில், ஒரு பெண் அஞ்சறைப் பெட்டியில் இருந்து மளிகைப் பொருள்களை எடுத்து வாணலியில் சமைப்பது போன்ற வண்ணப் படத்துடன் பத்துப் பொருள்கள் ரூ. 25 என்று பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ளது.
விலை குறைந்ததே என்று மக்கள் மகிழ்ந்தாலும், உள்ளே உள்ள பொருட்களின் அளவும் குறைந்திருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தனர்.
இந்த மளிகைப் பொருட்களின் புதிய அளவும், பழைய அளவும் (அடைப்புக்குறிக்குள்):
(அனைத்தும் கிராம்களில்)
மிளகாய் தூள் 100 (250)
மல்லித்தூள் 50 (250)
கடலைப் பருப்பு 50 (75)
உளுத்தம்பருப்பு 25 (50)
மஞ்சள் தூள் 50 (50)
வெந்தயம் 25 (25)
கடுகு 25 (25)
மிளகு 25 (25)
சீரகம் 50 (50)
கரம் மசாலா தூள் 10 (10)
மஞ்சள் தூள், வெந்தயம், கடுகு, மிளகு, சீரகம், கரம் மசாலா தூள் ஆகியவற்றின் அளவு குறைக்கப்படவில்லை. மற்ற 4 பொருட்களின் அளவையும் குறைத்து விட்டனர்.