சுரங்க லாபத்தில் பழங்குடியினருக்கு 26 சதவிகிதம்: மத்திய அரசு
டெல்லி : பழங்குடியினருக்கு சுரங்கத்துறை லாபத்தில் 26 சதவிகிதம் அளிக்கப்படும் என்று அரசு மாநிலங்களவையில் உத்திரவாதம் அளித்துள்ளது. அவர்கள் பகுதியில் சுரங்கப் பணி நடந்தால் முழு நியாயம் கிடைக்கும்படி செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.
இது குறித்து சுரங்கத்துறை அமைச்சர் பி.கே. ஹந்திக் கேள்வி நேரத்தின் போது கூறியதாவது,
2010-ம் ஆண்டிற்கான சுரங்கங்கள் மற்றும் தாதுப்பொருட்கள் மசோதாவின் வரைவை கலந்தாலோசித்து தீர்மானிக்க கடந்த ஜூன் மாதம் அமைச்சர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்த மசோதா இன்னும் அமைச்சர்கள் குழுவின் பரிசீலனையிலேயே உள்ளது. இருப்பினும், சுரங்க லாபத்தில் பழங்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்கும். அவர்களுக்கு சுரங்க லாபத்தில் பங்கு கொடுக்கப்படும். சுரங்க லாபத்தில் 26 சதவிகிதத்தை அவர்களுக்கு அளிக்க ஒதுக்கி வைக்கப்படும் என்றார்.
மாவோயிஸ்ட் நக்சலைட்களுக்கு பழங்குடியினரின் ஆதரவு அதிகம் இருப்பதால் அவர்களிடமிருந்து பழங்குடியினரை பிரித்துக் கொண்டு வரும் முயற்சியாக இது கருதப்படுகிறது.