சோப்ராஜின் மனைவி என்பதை நிரூபிக்குமாறு நேபாள பெண் நிகிதாவுக்கு உத்தரவு

சர்வதேச அளவில் பல கொலைகள், கடத்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டவர் இந்தியாவில் பிறந்தவரான சோப்ராஜ். பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர். தற்போது சோப்ராஜ் நேபாள சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
சோப்ராஜின் காதலி நிகிதா பிஸ்வாஸ். இவர் நேபாள நாட்டுக்காரர். இவரைத்தான் தனது மனைவி என்று சோப்ராஜ் கூறியிருந்தார்.
இந்த நிலையில், 1975ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த கோனி ஜோ பிரான்ஸிக் என்பவரைக் கொன்ற வழக்கில் சோப்ராஜுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சமீபத்தில் நேபாள உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அப்போது தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளைப் பார்த்து நிகிதாவின் தாயாரும், சோப்ராஜின் வக்கீலுமான சகுந்தலா தாபா ஆவேசமாக பேசினார். நிகிதாவும் ஆவேசமாகப் பேசினார். இதையடுத்து அவர் மீதும், நிகிதா மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தபோது நிகிதாவுக்கு 22 வயதாகிறது, சோப்ராஜுக்கு 66 வயதாகிறது. இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் மிக மிக அதிகமாக உள்ளது. எனவே நிகிதாவை, சோப்ராஜின் மனைவி என்று எப்படி நம்புவது என்று நீதிபதிகள் ராம் குமார் பிரசாத் ஷா மற்றும் பலராம் கேள்வி எழுப்பினர்.
மேலும், இருவருக்கும் திருமணம் நடந்ததற்கான எந்த சான்றும் இல்லை, ஆவணமும் இல்லை. அப்படி இருந்தால் அதை சமர்ப்பிக்க வேண்டும், தனது திருமணத்தை நிகிதா நிரூபிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த 2008-ம் ஆண்டு சோப்ராஜை காத்மாண்டுவில் உள்ள மத்திய சிறையில் நிகிதா சந்தித்து உள்ளார். நேபாளத்தில் கொண்டாடப்படும், தஹ்ஹைன் என்ற மத திருவிழாவின் போது நேபாளத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கைதிகளை பார்க்க அனுமதிப்பது வழக்கம். அப்போது தான் நிகிதா, முதல் முறையாக சோப்ராஜை சந்தித்துப் பேசினார். இதையடுத்து பார்த்தவுடன் அவர் மீது நிகிதாவுக்கு காதல் வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நீதிபதிகளைப் பார்த்து ஆவேசமாக பேசியதைத் தொடர்ந்து சகுந்தலாவுக்கும், நிகிதாவுக்கும் ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் இருவரும் உடனடியாக நீதிபதிகளிடம் மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து இதுகுறித்து ஆகஸ்ட் 22ம் தேதி தீர்ப்பளிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
பிகினி கில்லர் என்பதுதான் சார்லஸ் சோப்ராஜின் செல்லப் பெயர். 70களில் இவரது அட்டகாசம் உலக நாடுகளைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது. இளம் பெண்களை, குறிப்பாக நீச்சல் உடைப் பெண்களை மயக்கி கொலை செய்வது இவரது ஹாபியாக இருந்தது.
தற்போது 66 வயதாகும் சோப்ராஜின் தந்தை இந்தியர். தாயார் வியட்நாமைச் சேர்ந்தவர். அமெரிக்கப் பெண் கொலை வழக்கில் சோப்ராஜுக்கு ஆயுள் தண்டனை (20 வருடங்கள்) விதிக்கப்பட்டது. அதில் 7 வருடங்களை அவர் கழித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications