For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4வது முறையாக காங்கிரஸ் தலைவராகிறார் சோனியா காந்தி

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் வரும் செப்டம்பர் 17ம் நடத்கப்படவுள்ளது. இதில் கட்சியின் தலைவராக சோனியா காந்தி 4வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஆகஸ்ட் 27ம் தேதி கட்சித் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். அன்று முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்.
மனுக்கள் பரிசீலனை 3ம் தேதி நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற செப்டம்பர் 10ம் தேதி கடைசி நாள். போட்டியிருந்தால் செப்டம்பர் 17ம் தேதி தேர்தல் நடைபெறும். செப்டம்பர் 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவி்க்கப்படும்.

தலைவர் தேர்தல் நடந்தால் அதில் மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் 7949 பேர் வாக்களிப்பார்கள். டெல்லியிலும் மாநிலத் தலைநகர்களிலும் இதற்கான வாக்குப் பதிவு நடத்தப்படும் என்றார்.

ஆனால், சோனியா காந்தியைத் தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்பதே உண்மை. எனவே 17ம் தேதி சோனியா மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

1998ம் ஆண்டிலிருந்து சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார். நீண்ட காலம் கட்சித் தலைவராக உள்ளவர் என்ற சாதனையையும் அவர் ஏற்படுத்தியுள்ளார்.

2000ம் ஆண்டைத் தவிர மற்ற எல்லா தேர்தல்களிலும் அவர் ஒருமனதாகவே தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2000ம் ஆண்டில் ஜிதேந்திர பிரசாத் சோனியாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றார்.

முன்னதாக இந்தத் தேர்தல் குறித்து விவாதிக்க டெல்லியில் நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில், காஷ்மீர் விவகாரம் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டது.

அதில் காஷ்மீரில் இப்போதைய நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் விளக்கினார். சிதம்பரம் காரிய கமிட்டி உறுப்பினர் இல்லாவிட்டாலும் காஷ்மீர் பிரச்சனையின் தீவிரத்தைக் கருதி அவர் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலைமை மோசமாகவே உள்ளதாக சிதம்பரம் இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 4 கோடியிலிருந்து 2.9 கோடி உறுப்பினர்களாக குறைந்துவிட்டது குறித்தும் இக் கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது.

லே பகுதியில் ராகுல்:

இந் நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த லே பகுதியை நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பார்வையிட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்தார்.

காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல் இருந்தாலும் ராகுலின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை. அவருடன் சில பாதுகாப்பு வீரர்கள் மட்டுமே வந்தனர். நிவாரண முகாம்களுக்கு சென்ற அவர் மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து அவர்களின் துயரங்களை கேட்டறிந்தார்.

பிரதமர் நாளை (ஆகஸ்ட் 17) இங்கு வருகிறார். உங்களது குறை எதுவாக இருந்தாலும் அவரிடம் தெரிவியுங்கள். அவரிடம் குறைகளைச் சொல்ல பயப்படாதீர்கள், உங்களது நிலை குறித்து நானும் பிரதமரிடம் தெரிவிக்கிறேன். உங்களுக்கு வேண்டிய உதவியை செய்ய வலியுறுத்துகிறேன் என்று அவர்களிடம் ராகுல் காந்தி கூறினார்.

இந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுடன் சுமார் ஐந்தரை மணி நேரம் இருந்தார் ராகுல் காந்தி.

இந் நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் இன்று பார்வையிடவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X