கள் இறக்க அனுமதிக்க கோரி இன்னா நாற்பது என்ற பெயரில் போராட்டம்!
கோவை: தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க கோரி, செப்டம்பர் 15 ம் தேதி கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இருந்து, வ.உ.சி. மைதானம் வரை இன்னா நாற்பது எனும் பெயரில் 40 பதாகைகளுடன் ஊர்வலம் நடத்தப்படும் என, தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது.
கோவையில் பேசிய தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க கோரி தமிழக அரசிடம் கடந்த நான்கு வருடமாக போராட்டம் நடத்தி வருகிறோம்.
கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கள் இறக்க அனுமதி கேட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தோம். ஆனால் அதற்குள் தமிழக அரசு எங்களை அழைத்து செம்மொழி மாநாட்டுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தது. அதை நம்பி நாங்கள் போராட்டத்தை கைவிட்டோம்.
எங்கள் கோரிக்கை குறித்து தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு தேவையற்றது.
கேரள அரசு மது விலக்கு குறித்து ஆராய ஒரு குழு நியமித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி உதயபானு தலைமையிலான அந்தக் குழு, கள் மது கிடையாது. கள் உணவின் ஒரு பகுதிதான் என்று அறிக்கை சமர்ப்பித்தது.
கேரள அரசு பிரதி மாதம் 1 ம் தேதி மதுக்கடையை மூடுகிறது. ஆனால் கள்ளுக்கடையை மூட அறிவிக்கவில்லை. கேரள அரசிடம் உதயபானு குழு சமர்பித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிடவில்லை.
கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் இனியவை நாற்பது என அலங்கார வாகனங்கள் வ.உ.சி. மைதானத்தில் இருந்து கொடிசியா வளகாம் வரை ஊர்வலம் நடைபெற்றது.
இதே போல் கள் இறக்க அனுமதிக்கக் கோரி, இன்னா நாற்பது என்ற பெயரில், கொடிசியா வளாத்தில் இருந்து வ.உ.சி. மைதானம் வரை 40 பதாகைகளில் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications