அணு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றவே மோடி விடுவிப்பு-பாஜக, காங். மீது லாலு பாயச்ச்சல்
டெல்லி: நாடாளுமன்றத்தில் அணு உலை விபத்து தடுப்பு மசோதாவை சிக்கலின்றி நிறைவேற்ற பாஜகவின் உதவியை நாடியுள்ளது காங்கிரஸ். இதற்காகவே நரேந்திர மோடிக்கு சோராபுதீன் வழக்கில் தொடர்பில்லை என்று சிபிஐ நற்சான்றிதழ் கொடுத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
இந்த விவகாரம் இன்று லோக்சபாவில் பெரும் அமளியை ஏற்படுத்தியது.
மோடியை விடுவிக்க பாஜக பேசிய பேரத்திற்கு காங்கிரஸ் உடன்பட்டு விட்டது என்றும் லாலு கடுமையாக குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், பாஜகவும், காங்கிரஸும் கை கோர்த்து விட்டன. மோடியை விடுவித்தால் அணு பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவு தருவோம் என பாஜக பேரம் பேசி விட்டது. இதை காங்கிரஸும் ஏற்றுள்ளது. இதன் விளைவாகவே சோராபுதீன் வழக்கில் மோடிக்கு தொடர்பில்லை என்று சிபிஐ கூறியுள்ளது.
ஒரு முதல்வருக்குத் தெரியாமல், உள்துறை அமைச்சர் (அமீத் ஷா) எப்படி எதையும் செய்ய முடியும். இது நம்பும்படியாக இல்லை என்றார் லாலு.
லாலுவுக்கு ஆதரவாக சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவும் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே ரகசிய பேரம் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அவையில் பெரும் அமளி ஏற்பட்டு பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.