கொள்ளையர்களின் கூடாரமாகும் நெல்லை: பொதுமக்கள் பீதி
நெல்லை: நெல்லை மாநகரம் திருடர்களின் கூடாரமாக மாறி வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நெல்லை மாநகரத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஜநகர், அன்பு நகர், தியாகராயநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இரவு 7 மணிக்கு மேல் அந்த பகுதியில் பெண்கள் நடந்து செல்ல முடியவில்லை.
நேற்று முன்தினம் சேவியர் காலனியில் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளும், ரகுமத் நகரில் 19 பவுன் நகைகளும் திருடப்பட்டுள்ளன. டக்கரம்மாள்புரததில் உள்ள ஒரு வீட்டு உரிமையாளரிடம் ரூ.15 ஆயிரம் திருட்டு போனது.
மகாராஜநகர் ரவுன்டானாவில் இருந்து ஐ.ஓ.பி..காலனி, கல்யாணி நகர், ஸ்டேட் பாங்க் காலனி, பொன்மணி காலனி போன்ற பகுதிகளில் வசிக்கும் பெண்கள் வழிப்பறி சம்பவங்களுக்கு பயந்து ஆட்டோவில் செல்கிறார்கள். பைக்கில் வந்து பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளையர்கள் நகைகளை பறித்து கொண்டு நான்குவழி சாலை வழியே தப்பிச் செல்கின்றனர். மாலை 6 மணிக்கு மேல் அங்கிருந்து பைக்கில் வந்து மகாராஜநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை நோட்டம் விடுகின்றனர்.
அங்குள்ள ஒரு மெட்ரிகுலேசன் பள்ளி பகுதியில் பதுங்கியிருந்து அவ்வழியாக வரும் பெண்களிடம் நகைகளை பறித்துச் செல்கின்றனர். கடந்த 10 நாட்களாக மகாராஜநகர் ரவுன்டானா அருகேயுள்ள ஏ.டி.எம். அமைந்துள்ள பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் நடமாடி வருகின்றனர். இவர்கள் பணம் எடுப்பவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்களைத் தாக்கி பணத்தைக் கொள்ளையடித்துச் செல்கின்றனர்.
கமிஷனர் அலுவலகம், டி.ஐ.ஜி. பங்களா போன்ற உயர் அதிகாரிகள் இருக்கும் பகுதிகளில் கூட கொள்ளையர்கள் துணிச்சலாக நடமாடுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications