கிருஷ்ணகிரி அருகே கிராம உதவியாருக்கு அடி உதை-மணல் கடத்தல் கும்பல் அட்டகாசம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம உதவியாளர்களை மணல் கடத்தல் கும்பல் அடித்து உதைத்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் இட்டிக்கல் அகரம் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, வருவாய் ஆய்வாளர் முனுசாமி தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் கடத்தல் வாகனம் சிக்கவில்லை.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் இட்டிக்கல் அகரம் வருவாய் கிராம உதவியாளர்களாக இருக்கும் கோவிந்தசாமி (46), துரைராஜ் (48) ஆகியோர் மணல் கடத்தல் வாகனங்களை கண்டுபிடித்தனர்.
இது குறித்து அவர்கள் தங்களது மேல் அதிகாரிகளுக்கு தகவல் சொல்ல முயன்ற போது 7 பேர் கொண்ட கும்பல் அவர்கள் இருவரையும் அடித்து உதைத்தது.
இதில் படுகாயம் அடைந்த அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துமனையில் சிகிசைச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தாக்குதல் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து முனியப்பன், ராமசாமி ஆகிய இருவரை கைது செய்தனர்.
கடந்த வாரத்தில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் மணல் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக வருவாய் அதிகாரிகளை மிரட்டிய சம்பவம் பெரும் புயலை கிளப்பியது குறிப்பிடதக்கது. இந்தநிலையில் கிராம உதவியாளர்ளை மணற் கொள்ளையர்கள் தாக்கியுள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.