தமிழகம் முழுவதும் இன்றும் மழை பெய்யலாம்-வானிலை மையம்
சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றுபிற்பகல் வரை நல்ல மழை பெய்தது. சென்னை நகரம் இந்த ஒரு மழைக்கே பெரும் வெள்ளக்காடாகிப் போனது.
பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மரங்கள் விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 சென்டி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 4 செ.மீ மழையும் பெய்தது. செம்பரம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை, பொன்னேரி, பூண்டி ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை விமான நிலையம், திருவள்ளூர் செங்குன்றம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையை அடுத்த ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மீனம்பாக்கம், பரங்கிமலை, பெருங்குடி, மேடவாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
ஆதம்பாக்கம் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆதம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தேங்கி இருந்த தண்ணீரும் கால்வாய்களில் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பள்ளமான பகுதிகளில் மணல் போடப்பட்டு மேடாக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளாவில் கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாகவும் தமிழ்நாட்டில் உள்ள வெப்ப சலனம் காரணமாகவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தமட்டில் சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் சென்னையில் லேசான வெயில் அடித்து வருகிறது. சில நேரங்களில் வானம் இருட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications