ஈராக்கிலிருந்து யுஎஸ் கடைசி படையும் கிளம்பியது-ஆனால்..
கடைசியாக கிளம்பிய அமெரிக்கப் படைப் பிரிவு 4வது ஸ்டிரைக்கர் பிரிகேட் மற்றும் 2வது இன்பேன்டரி டிவிஷன் படையாகும். ஈராக் எல்லையை இந்தப் படையினர் கடந்தபோது வாகனங்களில் இருந்த வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தோஷமாக வாழ்த்து கூறிக் கொண்டனர். அமெரிக்க கொடிகளை உயர்த்திப் பிடித்து பறக்கச் செய்தனர்.
பெரும் நிம்மதிப் பெருமூச்சுடன் அவர்கள் சென்றதைக் காண முடிந்தது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஐந்து மாதங்களாகி விட்டது ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்து. இந்த கால கட்டத்தில் அமெரிக்கப் படையினர் ஈராக்கில் சந்தித்த நஷ்டங்கள், பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. இது அமெரிக்காவில் பெரும் சர்ச்சைகளை கிளப்பி விட்டது.
இதையடுத்து படிப்படியாக அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டு வந்தன. தற்போது கடைசி தாக்குதல் படைப் பிரிவும் கிளம்பி விட்டது.
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து திரும்பப் பெறப்படும் என அதிபர் ஒபாமா அறிவித்திருந்தார். ஆனால் அதற்குள்ளாகவே அவர்கள் கிளம்பிப் போய் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளம்பிச் சென்றது தாக்குதல் நடத்தும் படைகள் மட்டுமே. சில நிர்வாகப் படைகள் தொடர்ந்து இராக்கிலேயே உள்ளன. இவர்கள் தேவைப்பாட்டால் தாக்குதலிலும் ஈடுபடுவர். இந்த நிர்வாகப் படைகளில் 50,000 வீரர்கள் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால், அதில் அத்தனை பேர் இல்லை என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் தனது தாக்குதல் படைப் பிரிவுகளை முழுமையாக வாபஸ் பெறவில்லை என்றும் அமெரிக்கா மறுத்துள்ளது.
இந் நிலையில் இராக்குக்கான புதிய அமெரிக்கத் தூதராக ஜேம்ஸ் ஜெப்ரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.