மது அருந்தாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும்: அன்புமணி
சிதம்பரம்: இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மது அருந்தாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகிவிடும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.
சிதம்பரம் நகரில் பாமக பிரமுகர் திருமணத்தை நடத்தி வைத்து அவர் பேசுகையி்ல்,
இளைஞர்கள் போதை, புகை பழக்கம், மது அருந்துதல் போன்றவைகளை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாசும், நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
புகை பிடித்தல், போதை பழக்கம் மிகவும் கவலைக்குறிய விஷயம்.
அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் கூலி தொழிலாளி, மாலை நேரத்தில் தன் குடும்பத்தினரை மறந்துவிட்டு, வாங்கிய ஊதியத்தை மதுவுக்காக செலவழிக்கிறான். இதனால் அவன் மட்டும் அழியவில்லை. தன்னை சார்ந்து இருக்கும் குடும்பத்தையே அழிக்கிறான்.
சமீபத்தில் ஒரு ஆய்வு முடிவில், இன்னும் 5 ஆண்டுகளில் 18 வயதுக்கு வந்த அனைவரும் மது அருந்த ஆரம்பித்து விடுவார்கள். ஒரு கிராமத்தை ஆய்வு செய்தால் குறைந்தது 5 அல்லது 10 இளைஞர்கள்தான் மது அருந்தாமல் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மது அருந்தாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும் சூழல் உள்ளது.
ஆகவே இளைஞர்கள் நல்லொழுக்கத்தை கடைபிடித்து, தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக வேண்டாம் என கேட்டுகொள்கிறேன் என்றார்.