தீவிரவாதிகள் குறியில் 8 நகரங்கள்: மாநில அரசுகளுக்கு உளவுப்பிரிவு எச்சரிக்கை

வரும் 23-ம் தேதி ஓணம் பண்டிகை, 24-ம் தேதி ரக்ஷா பந்தன், செப்டம்பர் மாதம் 10-ம் தேதி ரம்ஜான் என வரிசையாய் பண்டிகைகள் வருகின்றன.
இந்த பண்டிகைகளால் கடைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த தருணத்தில் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
இதையடுத்து அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்துமாறு வலியுறுத்தி உள்ளது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஜெய்ப்பூர், அகமதாபாத், சூரத், திருவனந்தபுரம் ஆகிய 8 முக்கிய நகரங்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த இடங்களில் ஒரே சமயத்தில் தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களை நடத்த முயற்சிக்கக்கூடும் என்று உளவுத்துறை கூறியுள்ளது.
இந்த நகரங்களில் எங்கு, எப்போது தாக்குதல்கள் நடக்கும் என்பது தெரியாததால் அனைவரையும் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த 8 நகரங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவை தவிர மற்ற மாநில அரசுகளும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மார்க்கெட்டுகள், ஷாப்பிங் காம்ப்ளக்சுகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், தியேட்டர்கள், மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சர்வதேச விமான நிலையங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், சுற்றுலாத் தலங்கள், துறைமுகங்கள் போன்ற இடங்களையும் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் டெல்லி மெட்ரோ ரயில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள முக்கிய நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா அரசுகளை மிகுந்த கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications