இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்புவதால் பயனில்லை: பழ. நெடுமாறன்
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்த ஜீவா பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் இருந்து 5 தமிழ் எம்.பிக்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். டெல்லிக்குச் சென்ற அவர்கள் பிரதமரை சந்தித்து ஈழத் தமிழர்கள் நிலைமையை எடுத்துரைத்தனர். சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியையும் சந்தித்துப் பேசினர்.
தமிழர் பகுதிகளில் ஒரு லட்சம் சிங்கள ராணுவத்தினர் முகாமிட்டிருப்பதாகவும், அவர்கள் குடும்பத்தினரோடு அங்கு நிரந்தரமாகக் குடியேற வீடுகள் கட்டும் பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் அந்த எம்.பிக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்பிவைப்பதன் மூலம் மட்டும் புதிதாக எந்த உண்மை தெரிந்து விடப்போகிறது. ஐ.நா. குழுவை எதிர்த்து போராடிய இலங்கை அரசு இந்திய தூதரை மட்டும் வரவேற்கிறது என்றால் என்ன அர்த்தம்?
காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்னைகளைத் தீர்க்க திமுக அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கற்களை வெட்டி எடுத்தல் ஆகியவற்றில் ஆளுங்கட்சியின் பங்கு இருப்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும். முதல்வர் மற்றும் பதவியில் இருப்பவர்களின் குடும்பங்களில் இருந்து உருவாகியுள்ள பல அதிகார மையங்கள் நிர்வாகத்தை ஆட்டிப்படைக்கின்றன.
தமிழ், தமிழ் என்று பேசும் தமிழக அரசின் நிர்வாகத்தில் தமிழ் முழுமையாக ஆட்சி மொழியாக்கப்படவில்லை. வழிபாட்டுத்தலங்களில் தமிழ் இல்லை. தமிழக பள்ளிகளில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன். ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும், அனைவரும் எந்தவித வேறுபாடும் இன்றி ஒன்றுபட வேண்டும் என்ற சிந்தனை பரவும் இக்காலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மக்களை முன்னேற விடாமல் பின்னோக்கி தள்ளுவதாகும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள், மக்களுக்காகப் பாடுபடாமல் தங்கள் சம்பள உயர்வுக்காகப் போராடுவது அனைவருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலில் ஜீவா சிலையைப் பராமரிக்காமலும், அவரது பெயரை சாலைக்கு சூட்டாமலும் இருப்பது தமிழர்களுக்கு வேதனையை ஏற்படுத்துகின்றது. கட்சிக் கண்ணோட்டத்தில் அவரைப் புறக்கணிக்க எண்ணுபவர்கள் தியாகத்தையும், தொண்டையும் புறக்கணிப்பவர்களாவர் என்றார்.