குடும்ப பிரச்சினைகளை தீர்க்க 4 காவல் நிலையங்களில் கவுன்சிலிங்: கமிஷனர் ராஜேந்திரன் அறிவிப்பு
சென்னை: சென்னையில் நான்கு காவல் நிலையங்களில், குடும்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கவுன்சிலிங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
பன்முக கலாச்சாரங்களுக்கு இடையில் குடும்ப உறவு என்ற தலைப்பிலான கருத்தரங்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில், கமிஷனர் ராஜேந்திரன் கலந்து கொண்டார்.
இந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது,
இன்றைய நவீன யுகத்தில் கூட்டுக் குடும்பங்களைக் காண்பதே அரிதாகி விட்டது. மக்கள் தனிக் குடும்பங்களையே விரும்புகின்றனர். இந்நிலையில் குடும்ப உறவில் ஏற்படும் விரிசல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குடும்பத் தகராறு தொடர்பான புகார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதைத் தீர்த்து வைப்பதற்கே எங்களுக்கு நேரம் சரியாக உள்ளது. குடும்ப பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று கல்லூரி மாணவ- மாணவிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு கல்லூரிகளில் இது தொடர்பான பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னை நகரில் உள்ள பல போக்குவரத்து சிக்னல்கள் இயங்கவில்லை என புகார்கள் வந்துள்ளன. அவை மழையால் பழுதாகி உள்ளது. அவை உடனே சரி செய்யப்படும்.
அதிகரித்து வரும் குடும்ப பிரச்சினைகளை தீர்க்க சென்னை மாநகரின் 4 காவல் நிலையங்களில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்சினை தொடர்பாக பெண்கள் தான் அதிக அளவில் புகார் கொடுக்கின்றனர். அவற்றில் வன்முறை தொடர்பான புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications