பெங்களூர் கிரிக்கெட் ஸ்டேடிய குண்டுவெடிப்பிலும் மதானிக்குத் தொடர்பு-கர்நாடக அமைச்சர்
பெங்களூர்: பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடிய சுவரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானிக்குத் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மதானியை கர்நாடக போலீஸார் கடும் சிரமப்பட்டு கைது செய்து கொண்டு வந்துள்ளனர். அவரை காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா இன்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தவிர கடந்த ஏப்ரல் 17ம் தேதி சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கு வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் மதானிக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
ஏப்ரல் 17ம் தேதி சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கு உள்பகுதியிலும், சுற்றுச்சுவரிலும் இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்திலும் மதானிக்குத் தொடர்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பு நடந்த சமயத்தில், ஐபிஎல் போட்டி தொடங்கவிருந்தது. ஸ்டேடியத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். இருப்பினும் குண்டுவெடிப்புப் பொருட்படுத்தாமல் போட்டி தொடர்ந்து நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் உயிர்ப்பலி ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.