நேபாளத்தின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம்
காத்மாண்டு: நேபாள நாட்டின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.
நேபாளத்தின் பிரதமரைத் தேர்வு செய்ய அங்கு வாக்கெடுப்பு நடந்து வருகிறது. இதுவரை நடந்த 4 வாக்கெடுப்பிலும் தெளிவான பிரதமர் யாரும் கிடைக்கவில்லை. இதையடுத்து 5-வது முறையாக திங்கள்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்தாவும், நேபாள காங்கிரஸ் தலைவர் ராம் சந்திர பொத்யாலும் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை.
இதனால் நேபாளத்தில் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரதமர் பதவிக்கு அறுதிப் பெரும்பான்மை பெற 301 வாக்குகள் தேவை. திங்கள்கிழமை நடந்த வாக்கெடுப்பில் பிரசந்தாவுக்கு ஆதரவாக 246 வாக்குகளும், எதிராக 111 வாக்குகளும் பதிவாகின. பொத்யாலுக்கு ஆதரவாக 124 வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் பதிவாகின.
யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் செப்டம்பர் 5-ம் தேதி 6வது சுற்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.