கணவர் வீட்டார் கொடுமை-கலெக்டர் அலுவலகத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி
சேலம்: கணவர் வீட்டாரின் வரதட்சணைக் கொடுமையைத் தாங்க முடியாத கர்ப்பிணிப் பெண் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் தனது நண்பர் வேலு என்பவரின் தங்கை பிரியதர்ஷினி (23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் போது பிரியதர்ஷினிக்கு 8 பவுன் நகை போட்டுள்ளனர். அந்த நகையை சிவகுமார் வாங்கி அடகு வைத்து விட்டதாக தெரிகிறது. மேலும் சிவகுமார், அவரது தாயார் மாணிக்கம் ஆகியோர் ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டு பிரியதர்ஷினியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
கர்ப்பிணியாக உள்ள பிரியதர்ஷினியால் இதைத் தாங்க முடியவில்லை. இதையடுத்த கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு தனது கணவர் வீட்டாரின் கொடுமையை விவரித்து மனு ஒன்றை அளித்தார். பின்னர் தனது கையில் வைத்திருந்த பத்து தூக்க மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டு விழுங்கினார்.
சற்று நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார் பிரியதர்ஷனி. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை போலீஸாரும், பொதுமக்களும் சேர்ந்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கணவர் வீட்டாரின் கொடுமைகள் குறித்து மனு அளித்து விட்டு தற்கொலைக்கு முயன்ற பிரியதர்ஷனிக்கு இன்று கல்யாண நாள் என்பது குறிப்பிடத்தக்கது.