புத்தக வெளியீட்டு விழாவில் மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்
சென்னை: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள். அது போன்று என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி இருக்கிறார் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
எழுத்தாளர் ராணி மைந்தன் எழுதிய "எம்.பி.நிர்மல்-ஒரு தனி மரத்தோப்பு'' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் நேற்று மாலை நடந்தது. இதற்கு எக்ஸ்னோரா இண்டர்நேஷனலின் தலைவர் சுலோச்சனா ராமசேஷன் வரவேற்புரை அளித்தார்.
இதில் கலந்து கொண்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை நடிகர் விவேக் பெற்றுக் கொண்டார்.
அப்போது துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
கடந்த 1989-ம் ஆண்டு எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் அமைப்பு அடையாறில் தொடங்கப்பட்டது. அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த எனக்கு இந்த அமைப்பை தொடங்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த அமைப்பின் மூலமாக தான் நான் பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பையும் பெற்றேன். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார். அது போன்று என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி இருக்கிறார். நான் என் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஊக்கம் அளித்தவரும் என் மனைவி தான். இந்தப் புத்தகம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்று அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், எழுத்தாளர் சிவசங்கரி, ஷாசன் கெமிக்கல் எஸ்.அபயக்குமார், கே.ரெட்டி, ஆற்காடு இளவரசர் முகமது நவாப் அலி, பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications