தலைமைத் தகவல் ஆணையர் தேர்வுக் கூட்டம்-ஜெ. வரவில்லை-ஓ.பன்னீர் செல்வமும் ஆப்சென்ட்
சென்னை: முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த தமிழக தலைமை தகவல் ஆணையர் தேர்வு தொடர்பான கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா வரவில்லை. அவருக்குப் பதில் கலந்து கொள்வார் எனக் கூறப்பட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொள்ளவில்லை. மேலும், நேற்றைய கூட்டத்தில் தகவல் ஆணையர் குறித்த தேர்வும் நடைபெறவில்லை.
தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையராக பணியாற்றி வரும் எஸ்.ராமகிருஷ்ணனின் பதவிக்காலம் இந்த மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் விதிகளின்படி முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஒரு மாநில அமைச்சர் ஆகிய 3 பேர் கொண்ட குழு கூடி தேர்வு செய்ய வேண்டும்.
இதனால் முதல்வர் கருணாநிதியும், எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவும் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. ஆனால் ஜெயலலிதா வர மாட்டார், அவருக்குப் பதில் துணைத் தலைவரான ஓ.பன்னீர் செல்வம் போவார் என தகவல்கள் வெளியாகின.
அதேசமயம், விதிப்படி எதிர்க்கட்சித் தலைவர்தான் வந்தாக வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையில் இக்கூட்டம் நடந்தது. இதில் நிதியமைச்சர் அன்பழகன் பங்கேற்றார். பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத் துறை செயலாளர் கே.என்.வெங்கட்ரமணனும் கலந்து கொண்டார். ஆனால் ஜெயலலிதா வரவில்லை. ஓ.பன்னீர் செல்வமும் வரவில்லை.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கூட்டம் நடந்தது. இருப்பினும் யார் புதிய தகவல் ஆணையர் என்பது அறிவிக்கப்படவில்லை. நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆளுநருக்குத் தெரிவிக்கப்பட்டு ஒப்புத்ல பெறப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
பணி நீடிப்பில் தலைமைச் செயலாளராக உள்ள கே.எஸ்.ஸ்ரீபதி புதிய தகவல் ஆணையராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஜெயலலிதா வரலாம் என்ற எதிர்பார்ப்பில் நேற்று தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், டிவி கேமராமேன்கள் என பெரும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால் 'அம்மா' கடைசி வரை வரவே இல்லை.












Click it and Unblock the Notifications