நூதன முறையில் ரூ.4.50 லட்சம் வரி ஏய்ப்பு: சுங்கத்துறை முகவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலி ஆவணங்கள் தயாரித்து நூதன முறையில் ரூ. 4.50 லட்சம் வரி ஏய்ப்பு செய்த சுங்கத் துறை முகவரை மத்திய வருவாய் புனலாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் சுங்கதுறையினர் வழங்கும் ஆவணங்கள் போல போலியானவைகள் பல வெளிநாட்டு இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்படுவதாக மத்திய வருவாய்த் துறை இயக்குனர் ராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி மத்திய வருவாய் புனலாய்வுத் துறை அதிகாரிகள் தூத்துக்குடியில் உள்ள சுங்க இலாகா முகவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்து அவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.
இதில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மரைன் டீசல் என்ஜினுக்கான சுங்க இலாகாவின் தடை இல்லா சான்றிதழுக்காக தூத்துக்குடி ஜெய்லானி காலனியைச் சேர்ந்த ஹாட்மேன்(44) என்ற முகவர் பிறர் குறிப்பிட்டுள்ள தொகையை விட குறைவாக குறிப்பிட்டு அதற்குரிய வரியை மட்டும் செலுத்தி சான்று பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறக்குமதியாளர் குறிப்பிட்டுள்ள பொருளின் விலையை குறைத்து போலி பில் தயாரித்து அதன்மூலம் வரி ஏய்ப்பு செய்ததும் அதே நேரத்தில் சுங்க இலாகாவிடம் இருந்து பெறப்பட்டது போல உண்மை விலைக்குரிய பில்லை இறக்குமதியாளர்களுக்கும் அனுப்பி வைத்து மோசடி செய்துள்ளதும் தெரிய வந்தது.
இதன் மூலம் ரூ. 26 லட்சம் மதிப்பிலான பொருட்களுக்கு ரூ.4.50 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளார். இதே போன்று அவர் 7 முறை மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. மேலும் அவர் சுங்க இலாகா அதிகாரிகள் போல் போலி கையெழுத்திட்டு ரப்பர் ஸ்டாம்புகள் தயாரித்துள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். நூதனமுறையில் மோசடி செய்துள்ள ஹாட்மேனை வருவாய் புனலாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.












Click it and Unblock the Notifications