இலவச அறிவிப்பு எதிரொலி... பம்ப்செட் விற்பனை 30% குறைந்தது!
கோவை: தமிழகத்தில் உள்ள அனைத்து சிறு குறு விவசாயிகளுக்கும் இலவச பம்ப்செட் என்று தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து விவசாய பப்ம்செட் விற்பனை 30 சதவீதம் குறைந்துவிட்டது.
இந்திய அளவில் பம்ப்செட் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பம்ப்கள், கோவையில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாட்டில் உற்பத்தியாகும் பம்ப்களில் சுமார் 45 சதவீதம் இங்கு உற்பத்தியாகிறது.
பெரிய நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள், குறு நிறுவனங்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பம்ப் மற்றும் உதிரிப் பாக உற்பத்தி நிறுவனங்கள் கோவையில் இயங்கி வருகின்றன. இதில், 50 சதவீத நிறுவனங்கள் மட்டுமே ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதழ் பெற்றவை.
கோவை பம்ப் நிறுவனங்களில் வீட்டு உபயோக பம்ப்கள், விவசாய பம்ப்செட்கள், தொழில் நிறுவன பம்ப்கள் என 3 வகையான பம்ப்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் பம்ப்களில் சுமார் 45 சதவீதம் விவசாய பம்ப்கள்தான்.
கோவையில் உற்பத்தியாகும் பம்ப்கள், நாடு முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
கடந்த ஒருவாரமாக விவசாய பம்ப் விற்பனை குறைந்துவிட்டதால், கோவையில் உள்ள பம்ப் நிறுவனங்களுக்கு கிடைக்கும் ஆர்டர்கள் 30 சதவீதம் குறைந்துவிட்டதாக உற்பத்தியாளர் சங்க அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இலவச அறிவிப்பே காரணம்!
"தமிழகத்தில் இலவச விவசாய பம்ப்செட் திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தபின் கடந்த ஒருவாரமாக விநியோகஸ்தர்கள் (டீலர்கள்) தங்களது ஆர்டர்களை 30 சதவீதம் குறைத்து விட்டனர். நேரடியாக வந்து பம்ப்களை வாங்கும் விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.
ஆர்டர்கள் குறைந்து வருவதால் பெரும்பாலான பம்ப் நிறுவனங்களில், ஏற்கெனவே செய்த உற்பத்தியில் 20 சதவீதத்தைக் குறைத்து விட்டனர். பல பம்ப் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு கூடுதல் பணி நேரம் வழங்கப்படுவதும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், அவர்களுக்கு கூடுதலாகக் கிடைக்க வேண்டிய ஊதியமும் குறைந்துள்ளது'' என்றார், கோவை குறு பம்ப் மற்றும் உதிரிப் பாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத் (தலைவர் கே.மணிராஜ்.
வேலை இழப்பு நிச்சயம்!
"தமிழகத்தில் மொத்தம் 19 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. இதில், 15 லட்சம் இணைப்புகளில் 3 ஹெச்.பி. (குதிரைத் திறன்) மற்றும் 5 ஹெச்.பி. பம்ப்செட்கள் பயன்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள 4 லட்சம் இணைப்புகளில் 5 ஹெச்.பி.யை விட கூடுதலான திறன் கொண்ட பம்ப்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழக அரசு இலவச பம்ப் திட்டத்தை அறிவித்த பின் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் இருந்துவரும் ஆர்டரில் 75 சதவீதம் குறைந்து விட்டது. பிற மாநிலங்களில் இருந்துவரும் ஆர்டர்கள் குறையவில்லை.
இலவச பம்ப் திட்டம்தான் இதற்கு முக்கிய காரணம். இதேநிலை நீடித்தால் அடுத்த சில மாதங்களில் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும்'' என்று தொழிலாளர் தரப்பில் கூறப்படுகிறது.