ஆலோசனை வாரியம் முன்பு சீமான் ஆஜர்!
சென்னை: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இயக்குநரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் இன்று ஆலோசனை வாரியம் முன்பு ஆஜரானார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜெயிலில் நடைப்பயிற்சி செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறையிலேயே அவர் புத்தகம் எழுதுவதாகவும், அடுத்த படத்துக்கான திரைக்கதையை எழுதுவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, சீமானை சந்தித்து பேசினார். விஜய்யை வைத்து சீமான் இயக்கப் போகும் படத்தை தாணுதான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள சீமான் இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அட்வைசரி போர்டு முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார்.
இதற்காக இன்று காலை 8.10மணிக்கு வேலூர் சிறையிலிருந்து சென்னை கொண்டு செல்லப்பட்டார். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை அழைத்து சென்றனர்.