பழங்குடியின பகுதிகளை விட்டு பாக். நகருக்குள் இடம் பெயரும் அல் கொய்தா
இஸ்லாமாபாத்: இதுவரை பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் எல்லைப் புறத்தில் உள்ள பழங்குடியினப் பகுதிகளில் முகாமிட்டு செயல்பட்டு வந்த அல் கொய்தா அமைப்பினர் தற்போது பாகிஸ்தானின் முக்கிய நகர்ப் பகுதிகளுக்கு இடம் பெயர ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழங்குடியினப் பகுதிகளை தொடர்ந்து அமெரிக்கா குறி வைத்துத் தாக்கி வருகிறது. மேலும், ஏராளமான உளவாளிகளும் உள்ளே புகுந்துள்ளனர்.எனவே அவை பாதுகாப்பற்ற பகுதியாக மாறி விட்டதாக அல்கொய்தாவினர் கருதுகின்றனர்.
இதையடுத்து பாகிஸ்தானின் முக்கிய நகரங்களுக்கு தங்களது முகாம்களை அவர்கள் மாற்றி வருகின்றனர். முக்கிய நகரான கராச்சிக்கும் அவர்கள் பெருமளவில் இடம் பெயர்ந்து வருகின்றனராம்.
இதுபோன்ற முக்கியநகரங்களுக்குள் ஊடுறுவி விட்டால் அமெரிக்கப் படையினர் தாக்க முடியாது என்பதே அவர்களது திட்டம்.
அமெரிக்கப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி அல் கொய்தாவினர் பலர் பலியாகியுள்ளனர். இதையடுத்தே பழங்குடியினப் பகுதியிலிருந்து பாகிஸ்தானின் முக்கிய நகரங்களுக்கு அவர்கள் இடம் மாறி வருகின்றனராம்.
சிறு சிறு குழுக்களாக அல் கொய்தாவினர் நகர்ப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருவதாக அமெரிக்க உளவுத் தகவல்கள் கூறுகின்றன.
பாகிஸ்தானின் முக்கிய நகரான கராச்சிக்கு பல முக்கிய அல் கொய்தாவினர் ஏற்கனவே இடம் பெயர்ந்து சென்று விட்டனராம்.












Click it and Unblock the Notifications