2 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றம்
சென்னை: அரசு ஊழியர்களின் ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
இதன்மூலம் சுமார் 2 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதங்கள் மாற்றப்பட்டு, பயன் பெறவுள்ளனர்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
அரசு நியமித்த அலுவலர் குழு 2009ம் ஆண்டில் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட ஊதிய விகிதங்களில் முரண்பாடுகள் இருப்பின், அவற்றைக் களைய ரஞ்சன் ஐஏஎஸ் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு தனது அறிக்கையினை 24-04-2010 அன்று அரசிடம் அளித்தது. குழுவின் பரிந்துரைகளை அரசு நன்கு ஆராய்ந்து அனைத்துப் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தப் பரிந்துரைகளை ஏற்பதல் அரசுக்கு ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ.223 கோடி செலவாகும்.
இந்த ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, திருத்திய ஊதிய விகிதங்கள் வழங்குவதால் ஏறத்தாழ 2 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
திருத்திய ஊதிய விகிதங்கள் தொடர்பான ஆணைகள் துறைவாரியாக விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
நாளை கலெக்டர்கள் மாநாடு:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நாளை மாவட்ட ஆட்சியர்கள், உயர்போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது.
ஜார்ஜ் கோட்டையில் நாமக்கல் மாளிகை 10வது தளத்தில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டில் தலைமை உரையாற்றுகிறார்.
முதல் நாள் மாநாட்டில் தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை பராமரிப்பது, அரசு திட்டங்கள் பொது மக்களிடம் சென்று சேர்வதற்கான வழிமுறைகள் நிர்வாக நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இதில் மாவட்ட கலெக்டர்களுடன் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், போலீஸ் ஐ.ஜிக்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாளை மறு நாள் நடைபெறும் மாநாட்டில் டி.ஜி.பி. லத்திகா சரண், உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.












Click it and Unblock the Notifications