திருப்பதி கோவிலில் தலைவிரித்தாடும் ஊழல்: சி.பி.ஐ. விசாரணை நடத்த சந்திரபாபு நாயுடு கோரிக்கை
டெல்லி: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊழல் வேரூன்றி உள்ளது. ஸ்ரீகிருஷ்ண தேவராயர் நன்கொடை அளித்த விலைமதிப்பற்ற நகைகள் திடீரென்று மாயமாகி விட்டது. அவை எங்கே சென்றது என்று இது வரை தெரியவில்லை. மேலும், வஸ்திர அலங்கார சேவை டிக்கெட் விற்றதில் பல நூறு கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது.
இதில் தொடர்புடையவர்களை கண்டு பிடித்து உரிய தண்டணை அளிக்க வேண்டும் என்று நான் போராட்டம் நடத்தினேன்.
ஆனால் ஆந்திர அரசோ திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய சேர்மன் மற்றும் அதிகாரிகளை நியமித்ததோடு நின்று விட்டது. ஊழலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, திருப்பதி கோவிலில் நடக்கும் ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் ஊழல் பேர்வழிகள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள் என்று அவர் கூறினார்.