சென்னை மாநிலக் கல்லூரி தேர்தல்: மாணவர்கள் அடிதடி-2 பேர் காயம்
சென்னை: சென்னை மாநிலக் கல்லூரி தேர்தல் தொடர்பாக இரு பிரிவு மாணவர்களிடையே நேற்று நள்ளிரவு அடிதடி மோதல் நடந்தது. இதில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று மாணவர் பேரவை தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. தலைவர், உபதலைவர், செயலாளர், மாணவிகளுக்கான செயலாளர் ஆகிய 4 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
இந்தப் பதவிகளுக்கு 12 பேர் போட்டியிட்டனர். இதற்காக நேற்று நள்ளிரவு மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே மாணவர்கள் பேனர் கட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அடிதடியில் உதயகுமார், ரவி ஆகிய மாணவர்கள் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து கல்லூரி முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது.