தங்கபாலு போகிற இடமெல்லாம் கருப்புக் கொடி காட்டுவோம்-இளங்கோவன் ஆதரவாளர்கள்
கோவை: காங்கிரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லிய தலைவர்களை புறக்கணிப்பது உண்மையான தலைவர்களின் செயலா? என்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மிகப் பெரிய சந்தேகமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் தங்கபாலு எந்த கட்சியை சார்ந்தவர்? என்பதை அறிவிக்க வேண்டும். விளக்கம் தரவில்லையென்றால் அவர் போகிற இடமெல்லாம் கருப்புக் கொடி காட்டுவோம் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், இளங்கோவன் ஆதரவாளருமான யுவராஜ் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 43 வருடம் ஆகிறது. இருந்தாலும் காங்கிரசார் தங்களது வாழ்வை தியாகம் செய்து கட்சிக்கு கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் இளைஞர் காங்கிரசில் 13 லட்சம் இளைஞர்கள் புதிதாக சேர்ந்துள்ளார்கள்.
மத்திய காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த நலத்திட்டங்களை ஏற்று மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது காங்கிரஸ் கட்சியின் தலைமையின் தலையாய கடமையாகும்.
ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சி இத்தகைய திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்வதில்லை. ஜவகர்லால் நேரு, நகர புனரமைப்பு திட்டத்துக்கு மட்டும் மத்திய அரசு ரூ. 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இதை கூட சொல்ல தவறி விட்டார்கள்.
இதை மக்களிடம் எடுத்துச் சொல்லிய ஒரே தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டுமே. இதே போல் பல நலத்திட்ட உதவிகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறார்.
இதற்காக கோவையில் நடைபெறும் சி.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழாவுக்கு அவரை அழைக்காமல் புறக்கணித்து உள்ளனர். புறக்கணித்தது ஏன்? அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? இதே போன்ற நிகழ்வுகள்தான் கடந்த 1980, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு (கட்சி பிளவு) காரணமாக அமைந்தது. தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருந்தால் மீண்டும் அதே போல ஒரு நிகழ்வு ஏற்பட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியே காரணமாக அமைந்து விடும்.
காங்கிரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லிய தலைவர்களை புறக்கணிப்பது உண்மையான தலைவர்களின் செயலா? என்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மிகப் பெரிய சந்தேகமாக உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் தங்கபாலு எந்த கட்சியை சார்ந்தவர்? என்பதை அறிவிக்க வேண்டும். விளக்கம் தரவில்லையென்றால் அவர் செல்லும் இடம் எல்லாம் கறுப்பு கொடி காட்டுவோம். வருகிற 28-ந் தேதி கோவைக்கு வரும் தங்கபாலுவுக்கு உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக கறுப்பு கொடி காட்டப்படும்.
இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் உடனடியாக தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தங்கபாலுவை நீக்க வேண்டும். இதற்காக அவர்களுக்கு ரத்த கையெழுத்திட்டு கடிதம் அனுப்புவோம் என்றார்.












Click it and Unblock the Notifications